|
| சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி |
| செஞ்சூரியன்(ஏஜென்சி), 19 மே 2009 ( 12:52 IST ) | |
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்த 189 ரன்கள் இலக்கை பிராட் ஹாட்ஜ், மெக்கல்லம் ஆகியோரின் அபார ஆட்டத்தினால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எடுத்து கடைசி பந்தில் வெற்றி ஈட்டியது.
சென்னை அணியின் நட்சத்திர நாயகன் மேத்யூ ஹைடனுக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டது.அவருக்கு பதிலாக மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லி சேர்க்கப்பட்டார்.
டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.இதை தொடர்ந்து பார்த்தீவ் பட்டேலும், ஜார்ஜ் பெய்லியும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள்.இந்த புதிய ஜோடி நேர்த்தியாக ஆடி ஆனால் துரதிர்ஷ்டவசமாக இருவருமே ரன்-அவுட் ஆனார்கள்.
முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்த நிலையில், பட்டேல் 25 ரன்களிலும்(19 பந்து, 4 பவுண்டரி), அவரை தொடர்ந்து சிறிது நேரத்தில் பெய்லி 30 ரன்னிலும் (26 பந்து, 4 பவுண்டரி) வெளியேறினார்கள்.
இதன் பிறகு 3-வது விக்கெட்டுக்காக சுரேஷ் ரெய்னாவும், கேப்டன் தோனியும் அதிரடியாக ஆடினார்கள். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மென்டிசின் பந்து வீச்சில் 2 சிக்சர் விளாசிய ரெய்னா, தொடர்ந்து டிண்டாவின் ஓவரில் மேலும் ஒரு சிக்சர் அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
இறுதியில் அதே ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்த ரெய்னா 52 ரன்களில் (37 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். அவருக்கு பிறகு அல்பி மோர்கல் இறங்கினார்.
இதற்கிடையே 12 மற்றும் 16 ரன்களில் இருந்த போது முறையே கேட்ச்சில் இருந்து தப்பிய தோனி அந்த வாய்ப்புகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஆடினார். மோர்கலும் இறுதிகட்டத்தில் கடைசி ஓவரில் 2 சிக்சர் விரட்டி உற்சாகப்படுத்தினார்.
20 ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. தோனி 40 ரன்னுடனும் (28 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), மோர்கல் 21 ரன்னுடனும் (10 பந்து, ஒரு பவுண்டரி, 2சிக்சர்) களத்தில் இருந்தனர்.
அடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி கொல்கத்தா அணி ஆட்டத்தை அதிரடியாக தொடங்கியது. தொடக்க வீரர் கங்குலி 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ் வந்தார். மெக்கல்லமும், ஹாட்ஜும் சென்னை பந்து வீச்சை நாலா பக்கமும் விரட்டி அடித்தனர்.
மெக்கல்லம் 21 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். அவரது ஆட்டம் கொல்கத்தாவை வெற்றி நோக்கி பயணிக்க வைத்தது. அணியின் ஸ்கோர் 124 ரன்களை எட்டிய போது, மெக்கல்லம் ஜகாதி பந்தில் போல்டு ஆனார். முதலில் அவர் த்யோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டது போல் தெரிந்ததால் குழப்பம் ஏற்பட்டது.
பிறகு டி.வி. ரீப்ளேயில் அவர் ஸ்டம்பிங் செய்யும் முன்பே பந்து நேரடியாக ஸ்டம்பை தாக்கியிருப்பது தெரிந்தது. மெக்கல்லம் 81 ரன்கள் (48 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்தார்.
மெக்கல்லம் வெளியேற்றத்திற்கு பிறகு சென்னை அணியின் கீப்பர் தோனி, கீப்பிங் செய்யாமல் பீல்டிங் செய்ய வந்தார். அவருக்கு பதிலாக பார்த்தீவ் பட்டேல் கீப்பிங் பணியை கவனித்துக் கொண்டார். 3-வது விக்கெட்டுக்கு இறங்கிய டேவிட் ஹஸ்ஸி (3 ரன்) வந்த வேகத்திலேயே ரன்-அவுட் ஆனதால் ஆட்டம் சென்னை பக்கம் திரும்புவது போல் தெரிந்தது.
இதனால் பரபரப்பான கட்டத்தையும் எட்டியது. இந்த சூழலில் 4-வது விக்கெட்டுக்கு இணைந்த ஹாட்ஜ்-ரித்திமான் சகா ஜோடி, ஆக்ரோஷமாக ஆடி போட்டியை தங்களுக்கு சாதகமாக்கினார்கள். கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. பாலாஜி வீசிய 19-வது ஓவரில் ஹாட்ஜ் 2 சிக்சர் விளாச அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் எடுத்ததால் வெற்றி சுலபமானது.
இதையடுத்து கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது. 20-வது ஓவரை பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் சுரேஷ்ரெய்னாவுக்கு வீச தோனி வாய்ப்பு வழங்கினார். இந்த ஓவரில் முதல் பந்தில் ரன் எடுக்க தவறிய கொல்கத்தா அணியினர் அடுத்த 5 பந்துகளில் முறையே 1, 1, 1, 2, 1 என்று எடுத்து கடைசி பந்தில் திரில் வெற்றியை ருசித்தனர்.
கொல்கத்தா அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாட்ஜ் 71 ரன்னுடனும் (44 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), சகா 25 ரன்னுடனும் (13 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.
பிராட் ஹாட்ஜ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை அணிக்கு இது 5-வது தோல்வியாகும். சென்னை அணி தனது கடைசி லீக்கில் 20-ந்தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாபை சந்திக்கிறது. இதில் வென்றால் மட்டுமே அரைஇறுதிக்கு நுழைய முடியும். அதே ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் பஞ்சாப் அணியும் அரைஇறுதி சுற்றை எட்ட முடியும் இதனால் அது ஒரு காலிறுதிப் போட்டி போல் இருக்கும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|