யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மாறன் குடும்பத்தினருடன் சமரசம் : கருணாநிதிக்கு ஜெ. கேள்வி
சென்னை (ஏஜென்சி), 3 டிசம்பர் 2008   ( 15:15 IST )
மாறன் சகோதரர்களுடன் கருணாநிதிக்கு சுமுக உறவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து ரசு கேபிள் நிறுவனத்தின் கதி மற்றும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த குற்றச்சாற்றின் நிலை என்ன என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

1.12.2008 அன்று முதலமைச்சர் கருணாநிதி அரங்கேற்றிய கோமாளிக்கூத்து, ஊடகங்கள் பயனடைவதற்காக நடத்தப்பட்டதே தவிர, அதை எவ்விதமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வெளிப்படையான விரோதத்தைப்போக்கி முறிந்த உறவை மீண்டும் புதுப்பிக்கும் விதத்திலோ அல்லது இரண்டு போரிடும் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட தற்காலிகமான போர் நிறுத்தம் எனும் விதத்திலோ அல்லது இரண்டு வணிக நிறுவனங்களுக் கிடையே ஏற்பட்ட நிதி உடன்பாடு என்றோ இந்தக் கேலித்கூத்தை கருத்தில் கொள்ளலாம்.

அவர்களுக்கிடையே நிகழ்ந்த பரிமாற்றம் எந்த வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சியை ஊடக நிகழ்ச்சியாக ஆக்கியதன் மூலம், இந்த கோமாளி நாடகம் குறித்து பொதுமக்களும் தங்களுடைய கருத்தையும், கணிப்பையும் தெரிவிக்க கதவுகளை திறந்து விட்டிருக்கிறார். இதற்கு முன்பு கூடகண்ணீர் ததும்பும் கட்டுரைகளை எழுதியும், கனல் கக்கும் கவிதைகளை புனைந்தும், குடும்பத் தகராறை பொது மேடைக்கு கருணாநிதி எடுத்து வந்து விட்டார்.

எனவே, தற்போது ஏற்பட்டுள்ள குடும்ப போர் நிறுத்தம் அல்லது உடன்படிக்கை குறித்து பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் அல்லது ஆர்வம் உள்ளவர்கள் விமர்சித்தால் அது குறித்து கருணாநிதியால் புகார் கூறமுடியாது.

கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களை திருப்திபடுத்தும் வகையில் தலைவனுக்கு ஒன்று, மூத்த மகனுக்கு ஒன்று, இளைய மகனுக்கு ஒன்று, மற்றொரு வீட்டின் தலைவிக்கு ஒன்று என ஏற்கனவே தமிழ்நாடு பல பாகங்களாக பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய புது உடன்படிக்கையின் படி, ஏற்கனவே கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் வைத்திருந்த தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, அந்தப் பகுதிகள் மாறன் சகோதரர்களுக்கு கொடுக்கப் பட்டதா? இல்லை, கேபிள் டி.வி வியாபாரத்திற்கான ஏகபோக உரிமை மாறன் சகோரர்களுக்கு கொடுக் கப்படும் என்ற உத்ரவாதம் அளிக்கப் பட்டுள்ளதா?

கருணாநிதியின் குடும்பத் தகராறு குறித்து அவருடைய கவிதைகளையும், கடிதங்களையும் திரும்ப திரும்ப மக்கள் மீது திணித்து, மக்களை சலிப்படையச் செய்ததோடு அல்லாமல், அவர் நடத்திய "உடன்படிக்கை கண்காட்சிக்கும்' கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்ட மக்களுக்கு, இந்த பேரத்தில் உள்ள அம்சங்களை தெரிந்து கொள்வதில் எல்லாவிதமான உரிமைகளும் உண்டு.

கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் மீது ஒருவர் சுமத்தியதாக சொல்லப்படும் மனக்கிலேசங்களையும், வேதனை களையும் தெரிந்து கொள்வதில் அவ்வளவு அக்கறை இல்லா விட்டாலும், சண்டைக்காரர்கள் ஒருவர் மீது ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டுக்களின் கதி என்ன என்பதை அறிந்து கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.

பிஎஸ்என்எல் ஒப்பந்தப்புள்ளியில் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதற்கு, மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தான் பொறுப்பு என்று அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் தற்போதைய கதி என்ன?

60,000 கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து தினகரன் பத்திரிக்கையில் தினந்தோறும் வெளியிடப்பட்டு, சன் தொலைக்காட்சியிலும் மணிக்கு ஒருமுறை என்று மணிக்கணக்கில் ஒளிபரப்பப்பட்ட குற்றச்சாட்டுக் களின் நிலை என்ன?

எல்லாவற்றிற்கும் மேலாக, முதலமைச்சர் கருணாநிதியின் மகன் அழகிரிக்கு எதிராக கலாநிதி மாறனால் கொலை, சொத்துக்கள் தீயிட்டு சேதப்படுத்தியது, கொள்ளையடித்தது போன்ற குற்றச்சாட்டுக்களின் நிலைமை என்ன?

குடும்ப உறுப்பினர்களின் பார்வைக்கு தங்களுடைய குடும்பம் மிக உயர்ந்த குடும்பமாக தெரிந்தாலும், மேற்படி பிரச்சனைகள் குடும்ப உடன்படிக்கையின்படி பேரில் நிரந்தரமாக அமைதி அடையச் செய்யக்கூடிய பிரச்சனைகள் அல்ல. அல்லது ஒவ்வொரு கொலையும், ஒவ்வொரு தீயினால் ஏற்பட்ட சேதமும், ஒவ்வொரு ஊழலும் மற்றும் அனைத்து பிற குற்றங்களும் இரண்டு குடும்பங்களுக்குள் உடன்படிக்கை செய்து கொள்ளக்கூடிய அளவில் ஒரு புதிய சட்டத்தை இயற்ற தற்போதைய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறாதா?

இன்னொருபுறம் எழுகின்ற கேள்வி பேரனுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் மத்திய மந்திரிசபை மாற்றி அமைக்கப்படப் போகிறதா?

அரசு கேபிள் நிறுவனம் மூடு விழா திட்ட முறை குறித்தும் பொது மக்களுக்கு தெரியப்படுத்தப் படவேண்டும்.அரசு கேபிள் நிறுவனம் இனி செயல் அற்றதாக இருக்குமா? அல்லது மாறன் சகோதரர்களின் சுமங்கலி கேபிள் விஷன், கேபிள் வியாபாரத்தில் மீண்டும் தங்களது ஏகபோக உரிமையை நிலைநாட்டும் வகையில், பார்க்க தகுதியற்ற, பார்க்க சகிக்காத, யாரும் பார்க்காத, பயனற்ற கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதோடு தன் பணியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு கேபிள் நிறுவனத்திற்கு கட்டளை இடப்படுமா?

இவை அனைத்தையும் தமிழக மக்களுக்கு விளக்கக்கூடிய கடமை முதலமைச்சருக்கு உண்டு. இரு குடும்பங்களுக்கு இடையில் சண்டை நடந்து கொண்டிருந்தபோது, போர் நிருபராக பணியாற்றிக் கொண்டு மனம் நெகிழக்கூடிய கதைகளை எழுதிய கருணாநிதிக்கு போர் நிறுத்தம் ஆனவுடன் அது குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை உண்டு.

இந்தப்போரில் சம்மந்தப்பட்டவர்கள் எல்லாம் மனம் மாறிவிட்டார்கள், ஏனென்றால் அவர்களுக்கு மனம் இருக்கிறது என்று கூறினார் கருணாநிதி. இது வெறும் மனமாற்றமா? இருதய மாற்று அறுவை சிகிச்சை நடந்து, இதயமே மாற்றப்பட்டது போல் அல்லவா தோன்றுகிறது? இதயம் இனித்தது என்றார் கருணாநிதி.

முதலமைச்சர் சொன்னதுபோல் இந்த இருதய மாற்றம் ஏற்படுவதற்கு புது இதயத்தைக் கொடுத்த நன்கொடையாளி யார்? கருணாநிதி குடும்பத்தின் அரசியல் உயிரிகள் முறை மாற்றி பொருத்தப்பட்ட புது இதயத்தை ஏற்றுக்கொள்ளுமா? அல்லது நீக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

உடன்படிக்கையினால் எழும் இந்த வினாக்களுக்கெல்லாம் பதிலளிக்க கருணாநிதி விரும்பாவிட்டால், உடன்படிக்கையின் மூலம் ஏற்பட்டது மனமாற்றம் அல்ல, வெறும் பணப்பரிமாற்றம்தான் என்ற முடிவுக்கு மக்கள் வரவேண்டியிருக்கும் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னை விமான நிலையத்துக்கு கமாண்டோ பாதுகாப்பு
தமிழக மீனவ‌ர்க‌ளை தாக்கி இலங்கை கடற்படை கொள்ளை
மதுரையில் 3 ரவுடிகள் வெட்டிக் கொலை
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை
வெள்ள நிவாரணம் சென்றடையவில்லை: விஜயகாந்த்
அனைத்து கட்சி குழு இன்று டெல்லி பயணம்
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...