|
| உறவினருக்கு பரிந்துரை: அமைச்சர் பூங்கோதை ராஜினாமா |
| சென்னை (ஏஜென்சி), 14 மே 2008 ( 11:51 IST ) | |
லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கிய தனது உறவினரை காப்பாற்றுவதற்காக ஏடிஜிபியிடம் பரிந்துரை செய்த விவகாரத்தில், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் துணை இன்ஜினியர் ஜவஹர் என்பவர் சமீபத்தில் லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கினார். இவர் அமைச்சர் பூங்கோதையின் உறவினர் ஆவார்.
ஜவஹரை ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்றும்படி, தமிழக ஏடிஜிபி உபாத்யாயாவை அமைச்சர் பூங்கோதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் வெளியாகின.
இது தொடர்பான தொலைபேசி உரையாடல் அடங்கிய சிடியை, ஜனதா தளம் தலைவர் சுப்பிரமணியம் சாமி ஆதாரத்துடன் வெளியிட்டார். இதுகுறித்து கவர்னரிடமும் அவர் புகார் செய்தார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த குறித்த பிரச்சனையை இன்று சட்டசபையில் எழுப்பிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், " . சமூக நலத்துறை அமைச்சர் தம்முடைய உறவினர் ஒருவரை காப்பாற்று வதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
அமைச்சர் பொறுப்பை ஏற்கும் ஒருவர் இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி தாம் ஏற்றுக் கொண்ட நன்னடத்தை உறுதிமொழியை மீறி செயல்படக் கூடாது. ஆனால் இந்த அமைச்சர், மின்துறையில் லஞ்சம் வாங்கி கையுங்களவுமாக பிடிபட்ட தமது உறவினர் ஜவஹர் என்பவரை காப்பாற்றுவதற்கு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியை வலியுறுத்தி இருக்கிறார். இது அதிகாரதுஷ் பிரயோகமாகும்.
இந்த பிரச்சனையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என அறிய விரும்புகிறேன் " என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் கருணாநிதி , "அமைச்சர் பூங்கோதை என்னிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளார். இதுபற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.அவர் மேலும் இது குறித்து பேசியதாவது :
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இந்த அவையில் எடுத்து வைக்க வேண்டிய ஒரு கருத்தை அவருக்கே உரிய அமைதியான முறையில் எடுத்து வைத்துள்ளார். அதற்காக அவரை பாராட்டுகிறேன்; நன்றி தெரிவிக்கிறேன்.
ஏற்கனவே தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் பத்திரிகைகளில் வெளியானது. தலைமை செயலாளரும், வேறொரு அதிகாரியும் பேசிக் கொண்ட அந்த விவரம் குறித்து விசாரிப்பதற்கு நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழு விசாரணையை இன்னும் முடிக்கவில்லை. அந்த பணி நடைபெற்று கொண்டு இருக்கும் போதே இடையில் இப்படியொரு செய்தி வந்திருக்கிறது. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
இந்த செய்தி வருவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் அமைச்சர் என்பதால் நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இதற்காக விளக்கத்தை தெரிவிப்பதற்கு முன் இந்த பிரச்சனையையும் ஏற்கனவே உள்ள விசாரணைக் குழுவில் சேர்க்கலாமா என நினைத் திருக்கிறோம்.
இதற்கிடையே அந்த அம்மையார் (பூங்கோதை) ராஜினாமா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அவர் செயல்பட்டது சட்ட விரோதமான ஒன்றுதான். அவர்களின் பேச்சு குறித்து இப்போது சொன்னால் விசாரணைக்கு முன்பே கூறியதாக ஆகி விடும்.
ஏற்கனவே நடைபெற்று வரும் விசாரணையை பொறுத்த அளவில் அதில் எந்தவித ரகசியமும் இல்லை. தேச விரோத செயலோ, அரசுக்கு விரோதமான கருத்துக்களோ அதில் இல்லை.
ஆனால் இந்த விஷயத்தை பொறுத்தவரை லஞ்சம் வாங்கிய தமது சொந்தக்காரரை பாதுகாக்கும் முயற்சியாகும். இது உண்மை யிலேயே நான் வெட்கப்படும் ஒன்று. அதை நிச்சயம் ஏற்கவில்லை. அவரும் (பூங்கோதை) தவறை உணர்ந்து எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து வேறொரு விசாரணைக் குழு தேவையா? அல்லது இப்போதுள்ள குழுவே விசாரிக்கட்டுமா? என்பது குறித்து யோசிக்கிறோம். நிச்சயம் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மன்னிக்க மாட்டோம்; அதுவும் லஞ்சம் வாங்குவோருக்கு ஆதரவாக செயல்படுவது என்பது குற்றம் என்பதை உணருகிறோம்.
இது குறித்து அடுத்தடுத்து எடுக்கும் அரசின் நடவடிக்கைகள் இந்த அவைக்கு தெரியப்படுத்தப்படும். இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|