|
| பன்றிக் காய்ச்சல் : கோவை அரசு மருத்துவமனையில் இருவர் அனுமதி |
| திங்கள்கிழமை, 18 மே 2009 ( 17:47 IST ) | |
அமெரிக்காவில் இருந்து வந்த மகனும், அவரது தாயும் பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை பீளமேடு, சவுரிபாளையத்தை சேர்ந்த 26 வயது மாணவர் ஒருவர், அமெரிக்காவில் உள்ள நியுஜெர்சி கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்தார். கோவையில் உள்ள உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அந்த மாணவர் கடந்த 13-ம் தேதி விமானம் மூலம் பெங்களூர் வந்து, பின்னர் கோவை வந்தார்.
கோவை வந்தது முதல், அந்த மாணவருக்கு பன்றி காய்ச்சலுக்கான அறிகுறி ஏற்பட்டது.தொண்டை வலி மற்றும் காய்ச்சல், உடல்வலியால் பாதிக்கப்பட்டார்.மேலும் மாணவனின் 50 வயது தாய்க்கும் இந்த பாதிப்பு தொற்றிக்கொண்டது.
இந்த பாதிப்புகள் குறித்து, மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் விஜயலட்சுமிக்கு இருவரும் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு அறையில் தாயும், மகனும் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் துரைக்கண்ணன், மருத்துவமனை தலைவர் மருத்துவர் குமரன் கூறுகையில், பன்றி காய்ச்சல் அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், அமெரிக்காவில் படித்து வந்த மாணவரும், அவருடைய தாயும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருடைய ரத்தமும் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.
ரத்த மாதிரி, டெல்லியில் உள்ள நுண்ணோய் ஆய்வகத்துக்கு(என்.ஐ.சி.டி.) விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே பன்றி காய்ச்சல் பரிசோதனை மையம் டெல்லியிலும், புனேயிலும் மட்டும்தான் உள்ளது. டெல்லியில் உள்ள பரிசோதனை மையத்தில் இருந்து இன்னும் 48 மணிநேரத்துக்குள் பரிசோதனை முடிவுகள் தெரியவந்த பிறகுதான் பன்றி காய்ச்சலா? அல்லது சாதாரண காய்ச்சலா? என்று தெரியவரும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சை பெற்றால், உயிருக்கு ஆபத்து இல்லை. தாமதமாக சிகிச்சை மேற்கொண்டால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.
இந்த இருவருக்கும் தொண்டை வலி, மூக்கில் இருந்து சளி ஒழுகுதல், உடல்வலி போன்ற அறிகுறிகள் உள்ளன. பன்றி காய்ச்சல் என்று தெரியவந்தால், `டமிபுளு' என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்தை சுகாதாரத்துறை வழங்கி உள்ளது. பன்றி காய்ச்சல் என்பது ஒரு தொற்று நோயாகும். இந்த நோய் பாதித்தவர்கள் இருமினால் அருகில் இருப்பவர்களுக்கும் இந்த நோய் பரவும் வாய்ப்பு உள்ளது.
எனவே பன்றிக் காய்ச்சல் இருப்பவர்களை தனியாக வைத்துதான் சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்காக அரசு மருத்துவமனையில் தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய், மகன் இருவருக்கும் பன்றி காய்ச்சல் என்று உறுதிப்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டிலேயே இந்த நோயால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளிகள் இவர்கள் ஆவார்கள். எனவே தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|